கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த
எனக்கு சிறு பிராயத்திலிருந்தே அனுதின ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் பழக்கம்
உண்டு. இது என் தாய் எனக்குத் தந்த உந்துதல் என்பதை சொல்லியே ஆகவேண்டும். பிறப்பினாலேயே
நாம் ஒரு குறிப்பிட்ட மறையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். மத நம்பிக்கைகள்
நம்மீது திணிக்கப்பட்டிருப்பதால் நாளடைவில் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும்
அனுசரிப்பதிலும், அந்நம்பிக்கைகள் காட்டும் வழியில் நம்மைப் பழக்கப்படுத்திக்
கொள்வதிலுமே நாம் நிறைவு கொள்கிறோம். மதம் அல்லது வாழ்வு நெறி சுட்டும் வாழ்வியல்
விழுமியங்களைக் கைக்கொள்வதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. தன்னலம் மட்டுமே
பேணும் வாழ்வில், நாம் அயலார் நலன் பொருட்டு துன்பங்களை அனுபவிக்க
விரும்புவதில்லை. பாரம்பரியம், விசுவாசப் பாதுகாப்பு எனும் போர்வையில் சில
பழமைவாதிகள் கூட புற அடையாளங்களை நிலை நிறுத்துவதைத் தான் முன்மொழிகிறார்களே தவிர
தம்மையே பிட்டுத் தருகிற மனித/இறை இயேசுவின் பிறரன்பு/மனிதநேயம் அவர்களைப்
பொறுத்தவரை அவசியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.
சரி விடயத்திற்கு வருவோம். 2000 ஆம்
ஆண்டு என் 24 அம் அகவையின் பிற்பகுதி என் ஆன்மீக வாழ்வில் ஓர் திருப்புமுனையாக
அமைந்தது. சாலக்குடி, கேரளா அருங்கொடை தியானம் ஒன்றில் ஒருவாரம் கலந்துகொண்டு
திரும்பிய எனக்கு அதன் தாக்கம் சில நாட்களே நீடித்தது. ஆலயப் பணிகளில் எனக்கு
ஈடுபாடு இருந்ததால் ஞாயிறு இளையோர் கூட்டம், ஆலயப் பாடல் குழுவில் அங்கம்,
திருப்பலி விவிலிய வாசகம் வாசிப்பு, வெள்ளிக்கிழமை மதிய நற்செய்திக் கூட்டம்,
ஜெபம், திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என ஆலயத்துடனான என் உறவு மேம்பட்டிருந்த
சமயம் அது. அவ்வமயம் நண்பர் ஒருவர் பெங்களூருவில் தேசிய அளவிலான பொதுநிலையினர்
தலைமைத்துவ பண்பு பயிற்சி கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அனுபவத்தினைப்
பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும், அது தொடர்பான அறிமுக அமர்வு தூத்துக்குடியில்
நடக்க இருப்பதால் அதில் பங்கேற்க அழைப்பும் விடுத்தார். நான் நமது ஆலய
இளையோருடனும், தூய மரியன்னைக் கல்லூரியிலிருந்து வந்த சகோதரிகளுடனும் அந்த இரண்டு
நாள் கருத்தரங்கில் பங்கு பெற்றேன். இந்திய
கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் சார்ந்த ஆன்மீக குரு, அருட்சகோதரி மற்றும்
பொதுநிலையினர் பிரதிநிதி அடங்கிய அந்தக்குழு நடாத்திய அந்த இருநாள் அமர்வுகள்
ஆன்மீகம், திருச்சபை பற்றிய எனது பார்வையை வேறு கோணத்தில் திருப்பியது. முற்றும்
இந்தியமயமான அதாவது காவி உடை சாமியார்/குருவானவர், ஆரத்தி வழிபாடு, பஜனை என
இந்தியக் கலாச்சார அடிப்படையிலான திருப்பலி, உணவு உட்கொள்ளும் வேளையில் அறிமுகமல்லாத நபரிடம் பரஸ்பரம், நட்புறவு பேணத் தூண்டுகோல் என ஒரு வித்தியாசம்
அங்கே இருக்கத்தான் செய்தது. இறை இயேசுவைக் கடவுளாக வானங்களுக்கு அப்பால் ஏதோ ஓர் இடத்தில் இருந்து இந்த வையத்தை இயக்கும் ஓர் சக்தியாக உருவகித்தே
பார்த்திருந்த எனக்கு, இறைமகனான அவரை ஓர் சமூகப் புரட்சியாளனாகப் பார்க்கும்
பன்முகப் பார்வையைத் தந்தது அந்த நிகழ்வு. இயற்கைச் சூழலில் இறையனுபத்திற்கு இட்டுச் சென்ற அந்த கருத்தரங்கம் என்னுள் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியது எனலாம். கலந்துரையாடல் சமயம்
ஆன்மீக குரு விடுத்த கேள்விகளுக்கு நான் உடனுக்குடன் பதில் சொல்ல எத்தனித்த நேரம்,
சகோதரி ஒருவர் என்னைத் தட்டி சுயநினைவுக்கு நான் மீண்டுவரச் செய்தார். இது
எம்பெருமான் இயேசு தான், ஒலிவ மலையில் தோற்றம் மாறி தன் இறை இயல்பினைத் தம்
சீடருக்குக் காண்பித்த வேளை, பேதுரு தன்னையறியாமல் நாம் இங்கே இருப்பது எத்துணை
நன்று. உமக்கும் எலியாவுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும் என மூன்று கூடாரங்கள்
அமைப்போம் என்றார். அத்தகைய மனநிலையில்தான் நான் அன்று இருந்தேன். இனிய
நினைவுகளோடு அந்த அமர்வு நிறைவு பெற்றது. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் தேசிய
விவிலிய மையத்தில் ஒருவார பொதுநிலையினர் தலைமத்துவ பயிற்சி கருத்தரங்கிற்கான
அழைப்பு வந்தது.
இங்கு ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.
ஆன்மீகம் சார்ந்த கருத்தரங்கோ, தியானமோ அல்லது கூட்டமோ இளையோர் பங்குபெறுவது
என்பது கடினமே. கட்டாயத்திற்கென ஆலயம் வருவது என்பது எதார்த்தமாகி வருகிற இக்கால
சூழலில் ஆன்மீக சிந்தனையில் அடுத்த அடியெடுத்து வைக்க நம்மவருக்கு தயக்கமாகத்தான்
இருக்கிறது என்பதுதான் உண்மை. ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால் தேசிய அளவிலான தமிழ்
வழிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள குறைந்தது 15 நபர்கள் வேண்டும் என்றால் அந்த
எண்ணிக்கையிலானோரைக் கூட்டிச்சேர்ப்பதற்குள் போதுமென்றாகி விடுகிறது. அப்போதுதான்
அந்த சகோதரியின் ஞாபகம் வந்தது. வேறு பங்கினைச் சார்ந்தவர் என்றாலும் அனுதினத்
திருப்பலிக்கு எங்கள் ஆலயத்திற்கு அவர் வருவது உண்டு. அருகாமையில் வீடு
அமைந்திருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அவரிடம் பேசியதுகூட இல்லை. ஆனால்
நாங்கள் அழைக்கப்பட்ட கருத்தரங்கிற்கு ஆள் சேர்க்க வேண்டுமே! நாட்கள் நெருங்கிக்
கொண்டிருந்தன. ஓர்நாள் காலைத்திருப்பலி முடிந்தபின் அந்த சகோதரியிடம்
இக்கருத்தரங்கினைப் பற்றிப் பேசினேன். அவர்களும் கலந்துகொள்ள சம்மதித்தார்கள். தன்
உடன்பிறந்த சகோதரி மற்றும் குழந்தையுடன் இக்கருத்தரங்கில் பங்குபெற்றார்கள்.
அந்த சகோதரி முன்னர் இளையோர் கிறித்தவ
அமைப்பில் சேர்ந்து பல ஆன்மீக, சமூகப் பணிகள் ஆற்றிய அனுபவம் பெற்றவர் என்று
பின்னர் அறிந்து கொண்டேன். ஒத்த விருப்ப மனம்/ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நபர்களின்
சந்திப்பு என்பது நம் மானிட வாழ்வில் அரிதாய் நிகழ்கிற ஒன்றாய் இருப்பதைக்
காணலாம். வழிபாடு, சமூகப்பணி என்பது ஆன்மீகத்தின் இரு கண்கள் என்பதை அடியேன் புரிந்து
கொண்டிருந்த நேரம் அது. என் அகத்துள் அத்தகைய ஓர் தேடல் இருந்ததை உணர்ந்தேன். தக்க
சமயத்தில் அதனை வெளிக்கொணர்ந்த பெருமை இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி
இயக்கத்தினையும் (இ.கி.ம.இ), அந்த இயக்கம் சார்ந்த நண்பர்களையுமே சேரும்.
நிற்க. இ.கி.ம.இ. இரண்டாம்
வத்திக்கான் சங்க ஒளியில் கத்தோலிக்க திருச்சபை மறுமலர்ச்சியை அடிப்படையாகக்
கொண்டு எழுந்ததாகும். இதன் நிறுவனர் சுவாமி. அமலோரானந்தா இந்தியத் தாய்
பெற்றெடுத்த ஓர் ஒப்பற்ற இறையியலாளர். இவர் இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்
1966 முதல் 1985களில் அவர் கைவண்ணத்தில் உருவானதுதான் பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய
விவிலிய, மறைக்கல்வி மற்றும் வழிபாட்டு மையம். இந்த தேசிய மையத்தில் ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள்
மற்றும் பொதுநிலையினருக்கான தலைமைத்துவ பயிற்சிகளை வடிவமைத்ததுடன் தன் பணிவாழ்வில்
திருச்சபையில் பல்வேறு கட்டங்களில் பொறுப்பு வகித்த பலரை மறுமலர்ச்சிக்கான
கருவிகளாக உருவாக்கியதில் பெரும் பங்கு ஆற்றியவராவார்.
பாரம்பரிய கிறித்தவ வழிபாடுகளில்
பழக்கப்பட்ட எனக்கு இ.கி.ம.இ. அறிமுகம் செய்த திருப்பலி ஒரு நெருடலை ஏற்படுத்தியது
என்பது உண்மைதான்.
எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. இக்கட்டுரையின் முற்பகுதியில் தேசிய மையத்தில் ஒருவார கால கருத்தரங்கில் கலந்து கொண்டது பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா அந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம். எனது நண்பனின் தாய்மாமா ஒருவர் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கருத்தரங்கு தொடங்கிய முதல் ஓரிரு நாட்களில் போதனை, கலந்துரையாடல், பயிற்சிப் பட்டறை, நாடகம் என பல்வேறு அமர்வுகளின் மத்தியில் இந்தியத் திருப்பலியும் ஆன்மகுருவினால் நிறைவேற்றப்பட்டது. இந்த இந்திய மயமான திருப்பலி என்பது அவருக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம். இந்தியத் திருப்பலி, பல்சமய உரையாடல் என்பனவற்றில் ஓரளவு எனக்கு ஆறிமுகம் இருந்ததாலும், மாற்றங்களை வரவேற்கக்கூடிய உளப்பாங்கு என்னில் காணப்பட்டதாலும் புதியவற்றை ஏற்பதில் எனக்கு பிரர்ச்சினை ஏதும் எழுந்ததில்லை. ஆனால் அந்தப் பெரியவருக்கு அப்படியிருக்கவில்லை என நினைக்கிறேன். வாடிக்கையான நற்செய்திக் கூட்டங்கள், வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் பங்குபெற்று பழக்கப்பட்டிருந்த அவருக்கு இந்தியத் திருப்பலியில் முதன்முறையாகப் பங்குபெற்ற மறுநாள் மனதில் ஆயிரம் குழப்பங்கள். மாற்றமென்பது மரணத்திற்கு நிகரானதாக இருந்திருக்க வேண்டும். அதன்விளைவாக குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல் என அவருக்குள் ஒரு பிரளயமே உண்டாகி பாதியிலேயே ஊருக்குத் திரும்பிவிட்டார்.
எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. இக்கட்டுரையின் முற்பகுதியில் தேசிய மையத்தில் ஒருவார கால கருத்தரங்கில் கலந்து கொண்டது பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா அந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம். எனது நண்பனின் தாய்மாமா ஒருவர் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கருத்தரங்கு தொடங்கிய முதல் ஓரிரு நாட்களில் போதனை, கலந்துரையாடல், பயிற்சிப் பட்டறை, நாடகம் என பல்வேறு அமர்வுகளின் மத்தியில் இந்தியத் திருப்பலியும் ஆன்மகுருவினால் நிறைவேற்றப்பட்டது. இந்த இந்திய மயமான திருப்பலி என்பது அவருக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம். இந்தியத் திருப்பலி, பல்சமய உரையாடல் என்பனவற்றில் ஓரளவு எனக்கு ஆறிமுகம் இருந்ததாலும், மாற்றங்களை வரவேற்கக்கூடிய உளப்பாங்கு என்னில் காணப்பட்டதாலும் புதியவற்றை ஏற்பதில் எனக்கு பிரர்ச்சினை ஏதும் எழுந்ததில்லை. ஆனால் அந்தப் பெரியவருக்கு அப்படியிருக்கவில்லை என நினைக்கிறேன். வாடிக்கையான நற்செய்திக் கூட்டங்கள், வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் பங்குபெற்று பழக்கப்பட்டிருந்த அவருக்கு இந்தியத் திருப்பலியில் முதன்முறையாகப் பங்குபெற்ற மறுநாள் மனதில் ஆயிரம் குழப்பங்கள். மாற்றமென்பது மரணத்திற்கு நிகரானதாக இருந்திருக்க வேண்டும். அதன்விளைவாக குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல் என அவருக்குள் ஒரு பிரளயமே உண்டாகி பாதியிலேயே ஊருக்குத் திரும்பிவிட்டார்.
கருத்தரங்கு நிறைவு பெற்றது.
நாங்களும் ஊர் திரும்பினோம். எங்கள் பங்குத் தளத்திற்கு வந்த நாங்கள் ஆரம்ப
நாட்களில் இளையோர் குழுவில் பல்வேறு ஆலயம் சார்ந்த ஆக்கப் பணிகளில் எங்களை
ஈடுபடுத்திக் கொண்டோம். இது தவிர எனது வீட்டில் வாரம் ஒருமுறை நண்பர்களை அழைத்து
வந்து ஜெபக் கூட்டம் நடத்தி வந்தேன். இக்கூட்டத்தில் தொடக்கம் மற்றும் இறுதியில்
இறைவேண்டல் இருக்கும். மற்றபடி அது ஒரு கலந்துரையாடலாகவே இருக்கும்.
சுங்கத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சகோதரர், இ.கி.ம.இ. தூணாக விளங்கியவர்
அவ்வமயம் ஆன்மீக/சமூகப் பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆக்கமும், ஊக்கமும்
தந்தார். அயராத தம் பணிகளுக்கு மத்தியில் எங்களோடு நேரத்தை செலவிட அவர் எடுத்துக்
கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது. நான் முற்பகுதியில் குறிப்பிட்ட
சகோதரியும் ஏனைய இரு சகோதரிகளுடன் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்குகொண்டிருந்தார்.
நாங்கள் அனைவருமே ஏறக்குறைய ஒரே மன நிலையில் இருந்ததாகப் பட்டது எனக்கு. அங்கே
என்ன சொல்லப்படுகிறது என்பதனை செவியுற்றோமோ இல்லையோ ஒருசேர நாங்கள் அனைவரும் கூடி
வருவது ஒரு நல்ல உணர்வைத் தருவதாயிருந்தது. நான் மற்றும் இளையோர் யாவரும்
திருமணமாகாதவர்கள். ஆனால் இக்கூட்டங்களை முன்னிருந்து நடத்தித் தந்த சகோதரரும்
அந்த மூத்த சகோதரியும் மணமானவர்கள். தங்களின் அலுவலக, குடும்ப பொறுப்புகளுக்கு,
பணிகளுக்கு மத்தியில் எங்களுக்காக தங்களின் நேரத்தை தியாகம் செய்து
அக்கூட்டங்களில் பங்குபெற ஆர்வம் காட்டியது இன்னும் எனக்கு வியப்பளிக்கிறது.
வீட்டில் கூட்டம் நடத்தியதோடல்லாமல் தொழுநோயாளர், முதியோர் இல்ல சந்திப்பு என
எங்கள் ஆன்மீக/சமூகப் பணி எல்லையை விரிவுபடுத்திக் கொண்டோம்.
எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. ஒரு
கிறித்துமஸ் பெருவிழா சமயம் 2001 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நாங்கள் ஓர் குழுவாக
இணைந்து நடனம், குறுநாடகம், செய்தி என நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நிகழ்ச்சிகள்
முடிந்தபின் நாங்கள் கொண்டு சென்ற சிற்றுண்டிகளை அங்கிருந்த தொழுநோய் கண்டிருந்த
சகோதர, சகோதரிகளுடன் பகிர்ந்து உண்டோம். அது ஒரு அர்த்தமுள்ள கிறித்து பிறப்பு
விழாவாக அமைந்தது எங்களுக்கு.
இப்படியாக தொடர்பிலிருந்த நாங்கள் பிரிந்தது
காலத்தின் கோலம். காலத்தின் பிடியில் ஏதோ ஒரு கட்டத்தில் நம் நட்பின் தொடர்பு இழை
அறுந்த நூலாகப் போய்விடுகிறது. நேரமின்மை ஒரு சாக்கு என்பது நமக்குத் தெரியும்.
நம்முடைய முன்னுரிமை நட்பின் வட்டத்திலிருந்து விலகி குடும்பம், நம் அலுவல்,
பணிசார்ந்த பொறுப்புக்கள் மற்றும் வேலைப்பளுவினால் நெருக்கப்படுகிறது என்பதே
எதார்த்தம். இதற்கிடையில் நண்பர்களுக்கு மத்தியில் ஒருவர் ஏதாவது வகையில் உதவிகோரும்
வேளையில் அதனை மற்றவர் நிறைவேற்ற இயலா சூழல் என்று வரும்போது பிரிவு அல்லது
தொடர்பின்மை என்பது நிரந்தரமாகிவிடுகிறது.
Very plain and simple..to-the-core padhivu.. felt like talking to you by reading this!
ReplyDelete