அன்றொரு நாள் மகளை பள்ளிவிட்டு வருகிற வழியில் நான் கண்ட காட்சி. தனது வாழ்க்கை பயணத்தினை முடித்து இறுதி யாத்திரையில் மயானம் நோக்கி ஒருவர், எதிரில் கால அவசரத்தில் பள்ளி குழந்தைகள், அலுவலகம் செல்வோர் என பலர். இது என் சிந்தனையை வெகுவாகத் தூண்டியது. அவசரகதியில் நாம் எதிரெதிர் திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் ஏன் என்று பொருள் புரியாமலே. தன் இறுதி யாத்திரையில் உயிரற்ற உடலாய் உற்றார், உறவினர் உடன்வர மயானம் நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த நபர் நம்மைப்போல பல்வேறு காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு துரிதகதியில் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருந்திருப்பார். அவ்வமயங்களில் தாம் இன்னும் இந்தப்புவியில் எவ்வளவு நாட்கள் வாழப்போகிறோம் என்று குறைந்தபட்சம் யோசித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே. நம்மையே நாம் எடுத்துக் கொள்வோமே. நம்மில் எத்துனைபேர் மரணம்பற்றி சிந்திக்க அல்லது பேச தயாராயிருப்போம். மரணம் பற்றிய சிந்தனையே நமக்கு அச்சத்தினை ஏற்படுத்துகிறது, அது புதிதல்ல. அக்கம் பக்கம் நம்மோடு வாழ்ந்த எத்தனையோ மனிதர்கள் மரணித்திருக்கிறார்கள். அவர்களின் இறுதிப்பயணத்தில் நாம் பங்கேற்றிருப்போம். அந்நேரத்திலுங்கூட சிறிதும் துக்க உணர்வு இல்லாது நகைச்சுவையாய் பேசி நாம் சிரித்திருப்போம். ஏனெனில் அங்கு இழப்பின் வலி நமக்கல்லவே. ஒருவேளை மறைந்தவர் எல்லாவற்றையும் அனுபவித்து தம் முதிர்வயதில் இயற்கை எய்திருந்தால் நமது அத்தகைய நடவடிக்கை மன்னிக்கப்படலாம். ஆனால் வாழவேண்டிய வயதில் தம் இன்னுயிரை ஈத்த சிறாரோ அல்லது தம்மை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பெற்றவரையும், மனைவி மக்களையும் தவிக்கவிட்டுச் சென்றவரின் இறுதி யாத்திரையில் சிரித்துப்பேசுவது சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. தம் வீட்டில் இழவு என்றால் அவ்வாறு நாம் சிரிக்க இயலுமா என்பதை சிந்திக்கவேண்டும் அம்மாமணிகள்.
இன்று இறந்தநபரின் சடலத்தின்முன் செல்ஃபி நிழற்படம் எடுத்துக்கொள்ளும் நிலை நம் கலாச்சார சிதைவின் உச்சகட்டம் என்றே சொல்ல வேண்டும். இந்த மோகத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த இளைஞர்கள் பலர். அதிலும் ஓர் புள்ளிவிவரம் நம் இந்தியாவில்தான் இவ்வகையான இறப்புகள் அதிகம் என்கிறது. எது எப்படியோ, இறப்பு என்பது இழப்பு உண்மையில். குறித்த காலத்திற்கு முன்பே தன்னை மாய்த்துக் கொள்ளும் மடமைபற்றி நாம் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.
ஓர் துறவி சொன்னது என் நினைவுக்கு வருகிறது. நீங்கள் இன்றிரவு மரிக்கப் போகிறீர்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள். இதன் உட்பொருள் என்ன? மரணம் எங்கே மறைத்துவைக்கப்பட்டதோ அங்கேதான் இறைவன் இருக்கிறான் என்று மனிதன் உணர ஆரம்பித்தான் என்று கவிஞர் கண்ணதாசன் கூறுவார். ஆனால் அதே மரணம் சம்பவிக்கும் நேரத்தினை நாம் அறிந்துகொண்டிருந்தால்....
விட்டுப்பிரிய போகிறோமே என்ற கவலையில் எல்லோரையும் உண்மையாக நேசித்திருப்போம். உரசல்கள் தவிர்த்திருப்போம். பகிர்ந்து உண்டிருப்போம். உடன்வராத அசையா சொத்துகளுக்காக உடன்பிறந்தவர்களுடன் பகைமை வளர்த்திருக்கமாட்டோம். கடுஞ்சொற்பிரயோகத்திற்காக சாகும்வரை என வைராக்கியம் பாராட்ட மாட்டோம். உறவினரை உளமார ஏற்றிருப்போம். நட்புடன் அளவளாவி மகிழ்ந்திருப்போம். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியையும், மணித்துளியையும் மிக கவனமுடன் செலவு செய்திருப்போம். இவையனைத்திற்கும் மேலாக நம் மனம் ஒருவித ஏக்கத்தில், வேதனையில் துவண்டிருக்கும். எதையும் இழந்தபின்னர்தான் அதின் அருமை புரியும் என்ற விதி விளிம்பிற்கு நாம் விலக்கில்லையே.
எவ்வளவோ நிகழ்வுகள் இந்த பூவுலக வாழ்க்கை நிலையற்றது என்ற சத்தியத்தை எண்பிக்க. ஆனால் இந்த விதி நம்மை அந்த உண்மையை உணரவிடாமலே நம் மனம்போன போக்கில் ஆடவைக்கிறது. மரணம் வாழ்விடம் கேட்டதாம். உன்னை எல்லாரும் நேசிக்கிறார்கள். ஆனால் என்னை ஏன் வெறுக்கிறார்கள் என்று. அதற்கு சிரித்துக்கொண்டே வாழ்வு சொன்னது நான் அழகான பொய், நீ அவலட்சனமான உண்மை என.
மரணம் இயற்கையின் நியதி. ஒரு திரைப்பட பாடல்வரி சொல்லும் பாடம் `வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடமேது? கூடு விட்டு கூடு பாயும் ஆன்மா என்பர் என்றாலும் நாம் தரித்திருக்கும் இந்த உடல் உணர்ச்சிகளின் எச்சம். இதில் பாசம், பற்று, பசி, தாகம், விரக்தி, வெறுப்பு, அன்பு, மோகம், தாபம், பொறாமை என எல்லாமே சூழலுக்குத் தகுந்தாற்போல் மாறி, மாறி வெளிப்பட்டு அதன் பலனை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கும். நாம் நம்மை மனமாகவே உணர்வதினால்தான் இன்ப, துன்ப சேற்றில் உழன்று பற்பல பிறவிகளாக பிறப்பெடுக்க வேண்டியிருக்கிறது என்பது மறைகள் சொல்லித் தரும் பாடம். பிறவிச்சங்கிலி அறுக்க மனமற்றிருப்பது அவசியம் என்பது ஆன்றோர் வாக்கு. மரணம் முற்றுப்புள்ளி அல்ல, அது மற்றொரு தொடக்கம் என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை நம்வசமாகும். கவிஞர் வைரமுத்து அவர்களின் பின்வரும் கவிதையுடன், வாழ்ந்தவர் மறைந்தாலும் அவர் இயற்கையில் இரண்டறக் கலந்துவிட்டார் என்ற நம்பிக்கையுடன் அவர் ஸ்பரிசத்தினை உணர்வோம். மரணத்தினை எதிர்கொள்ளும் துணிவையும் பெறுவோம்.
நிம்மதி சூழ்க!
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க!
தூயவர் கண்ணொளி சூரியர் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
கவிஞர் வைரமுத்து
0 comments:
Post a Comment