Monday, February 11, 2019

பாமர பரிவு



      அன்றொருநாள் எங்கள் நெருங்கிய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஊர் திரும்பினோம். நாங்கள் பயணம் செய்த பேருந்து மதுரை பேருந்து நிலையம் விட்டு சிறிது தூரம் சென்றபின் எங்களுக்கு முன் இருக்கையில் பயணம் செய்த ஓர் மூதாட்டி நடத்துனரிடம் இந்தப்பேருந்து திருச்செங்கோடுதானே போகிறது என்று கேட்டார். நடத்துனர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால் நாங்கள் பயணித்த அந்தப் பேருந்து தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் கோவில் வாசல் வரை செல்லும் பேருந்து. நடத்துனர் பயணிகளைக் கவர `திருச்செந்தூர், திருச்செந்தூர்’ என கூவியது அவர் செவிகளுக்கு திருச்செங்கோடு, திருச்செங்கோடு என எட்டியதோ தெரியவில்லை அவர் தவறாக அப்பேருந்தில் ஏறியிருந்தார். நட்த்துனர் நல்லவர். மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார். அவர் அப்பெண்மணியிடம் `ஏம்மா யாரிடமாவது விபரம் கேட்டு ஏறியிருக்கலாமே’ என அறிவுறுத்திவிட்டு அவர் அடுத்து செய்ய வேண்டியவற்றைச் சொல்லி ஓர் தாளில் தேவைப்படின் மற்றவர் உதவியை நாட ஏதுவாக அவசியமான எல்லா தகவல்களையும் குறித்துக் கொடுத்துவிட்டு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவரை இறக்கிவிட்டார். இப்போது அம்மூதாட்டியின் கவலைரேகைகள் படர்ந்த முகம் பார்க்க என் மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல். தனியொரு ஆளாய் கையில் இரு பைகளுடன் அவர் நடத்துனர் காட்டிய எதிர்த்திசையில் அடுத்த பேருந்தினை எதிர்நோக்கிச் சென்றார்.

       இவர்போன்று எத்தனையோ பாமரர்களை நாம் வழியில் சந்தித்திருக்கிறோம். காது கேட்கும் திறன் அற்றதினாலோ, கல்வியறிவு குறைபாட்டினாலோ அவர்கள் தங்கள் பாதையில் தவறிவிடுகிற தருணங்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகங்கள். அதிலும் பெண்கள் என்றால் நமது அச்சம் இன்னும் அதிகமாகிறது. அவர்கள் எந்த ஒரு சமூக விரோதியின் கையிலும் அகப்படாமல் பத்திரமாக தங்கள் வீடு சென்று சேரவேண்டும். இம்மாதிரி சூழல்களில் அவரின் இதயப் படபடப்பு சற்று அதிகமாகவே இருக்கும். தங்கள் இல்லிடம் சென்று சேரும்வரை குறிப்பாக இரவுநேரமென்றால் அவர் இதயம் இரட்டிப்பாய்த் துடித்திருக்கும். இம்மாதிரி சூழ்நிலையில் ஆதரவற்ற எவரையும் வழியில் நாம் கண்டால் நம்மால் ஆன உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். அவர்கள் நம் தாயும், சகோதரர்களுமாய்ப் பாவித்து அவர்கட்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். இதனைப் பதிவு செய்யும்போது எனக்கு வலைத்தளத்தில் வாசித்த ஓர் நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது.



     கிராமத்திலிருந்து தாயும், மகளும் சென்னை வந்திறங்கினர். அவர்கள் வந்தநேரம் ஓர்நாள் அதிகாலை. ஒருவித தயக்கத்துடன் அவர்கள் நின்றிருந்த அந்தப்பகுதி மக்கள் நடைபயிற்சி செல்லும் ஓர் இடம். அவ்வழியாக்க் கடந்துசென்ற நன்மனம் படைத்த ஒருவர் அவர்களை அணுகி விசாரிக்க, அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்தின் விபரங்கள் அடங்கிய அந்தக் குறிபாணையை அவரிடம் கொடுத்தார்கள். அதனை வாங்கிப்படித்துப் பார்த்த அந்த நபருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
கோவைப் பலகலைக்கழகத்திலிருந்து வந்திருந்த அதில், அந்த மகள் அவளுடைய மேற்படிப்புக்கான கலந்தாய்விற்காக கோவைப் பலகலைக்கழகத்திற்கு அந்தநாளில் மதியம் 2 மணிக்கு கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தாள். இப்போது மணி காலை மணி 7. அந்த்த் தாய் மற்றும் மகளின் பரிதவிப்பைப் புரிந்துகொண்டிருந்த அந்த நல்லவர் துரிதகதியில் செயல்படத் தொடங்கினார். இந்தச்சூழலில் அவர்கள் பேருந்திலோ அல்லது புகைவண்டியிலோ பயணம் செய்தால் நிச்சயமாக குறித்த நேரத்தில் கோவை சென்று சேரமுடியாது என்பதை உணர்ந்த அவர் தம் செலவில்  சென்னையிலிருந்து கோவைக்கு விமான டிக்கெட் எடுத்து அவர்களை விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்துடன் நில்லாமல் கோவையிலிருந்த நண்பரிடம் சொல்லி அவர்கள் இருவரையும் கோவை விமான நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் அழைத்துச்சென்று சேர்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அவர் நண்பரும் துணைவேந்தரை சந்தித்து நடந்த எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி கால நீட்டிப்பு செய்ததுடன் அப் பல்கலைக்கழகத்தில் கல்விபயில இடத்தினையும் உறுதிசெய்தார். உதவிபெற்ற அந்தத்தாயும், மகளும் தங்கள் நெஞ்சார அந்த நல்லவரை வாழ்த்தினர் நன்றியுள்ளத்தோடு. கண்காண இயலாத அந்தக்கடவுளைக் கண்ணாரக் கண்டனர் அவர் உருவில். இது நம் மனதைக் கொள்ளை கொண்டாலும் நாம் போற்றவேண்டிய அந்த நல்லவர் மாதிரி நபர்கள் குறிஞ்சிமலர்போல அரிதாகத்தான் வரலாற்றுப்பதிவுகளில் வருகிறார்கள். எனவே படிக்காத, உதவிவேண்டும் நிலையில் இருக்கும் பாமரர்கள் ஒருமுறைக்கு இருமுறை ஒருவர் அல்லது அதற்குமேற்பட்டவரைக் கேட்டு சரியான பாதையில் பயணிக்கவேண்டும். உதவிநாடிவரும் சகோதர, சகோதரிகளை நாமும் எரிச்சல் அடையாமல் அவசியமான நேரத்தில் உதவிக்கரம் நீட்டி அவர்களை ஆதரிக்கவேண்டும்.  பயனாளிகளும் தங்களுக்கு தக்க சமயத்தில் உதவிய நபர்கள்மூலம் கடவுளின் கருணைக்கரத்தினை உணர்ந்தால் இந்த பதிவு அதன் பிறவிப்பயனை அடைந்ததாகும்.

0 comments:

Post a Comment