முத்துமாநகருக்கு மகிழ்ச்சியின் நாட்கள் இவை. ஏன்? பனிமய அன்னை எனவும் பெயர் தாங்கிய அம்மா மரியை நினைந்து 26 ஜூலை அன்று கொடியேற்ற வைபவம் தொடங்கி ஆகஸ்ட் 5 2012 வரையிலான பத்து நாட்களும் உற்சாகம் கரைபுரண்டோட எம்மறையினரும் இணைந்து விழா கொண்டாடும் அற்புத தருணம். இவை மத நல்லிணக்கத்தின் நாட்கள். சாதி, மறை எனும் வேற்றுமைகளை மறந்து ஒரு தாய் மக்களாய் ஒன்று கூடும் சங்கமத் திருவிழா இது.
எழில்மிகு அன்னையின் திருவுருவ சுரூபம் நம் நகருக்கு வந்த வரலாறு பலர் அறியாத ஒன்று. குறிப்பாக தூய சவேரியார் ஆலய பங்கு சமூகத்த்தினைச் சார்ந்த நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஓர் வரலாற்று உண்மை, நம் நகரின் பெயர் விளங்கும் பாரம்பரிய அடையாளமான பனிமய அன்னை திருவுருவ சுரூபத்துடன் தொடர்பு கொண்டது. அது என்னவென்றால், இச்சுரூபம் நமது ஆலய/பங்கு பாதுகாவலரும், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஞானத் தகப்பனுமாகிய தூய சவேரியார், அவர் கிறித்தவ மார்க்கத்திற்கு மனம் மாற்றிய, அவரது மனத்தில் பாசத்தாலும், கறையற்ற உண்மை அன்பினாலும் நீக்கமற நிறைந்திருந்த, மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்ட பரவர் மற்றும் பிற இன மக்கள், தாம் பெற்றுக் கொண்ட கிறித்தவ விசுவாசத்தில் ஊன்ற கத்தோலிக்க விசுவாசப் பாதுகாவலியான அம்மா மரியின் உறுதுணை அவசியம் என்பதை உணர்ந்து அவர்தம் வேண்டுகோளுக்கிணங்க ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவிலிருந்து அகுஸ்தீனியன் சபை அருட்சகோதரிகளால் அனுப்பப்பட்டதாகும். இந்நிகழ்வை இன்னும் விவரித்துச் சொல்ல 460 ஆண்டுகள் பின்னோக்கிய சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.
சவேரியார் தமது நெடுநாள் இலட்சியக் கனவான சீன மறைபரப்புப் பணிக்காக கி.பி. 1552 ஆம் ஆண்டில் பயணப்படுகையில் வழியில் சில நாட்கள் மணிலா நகரில் தங்குகிறார். அவ்வமயம் அங்கிருந்த அகுஸ்தீனியன் மடத்தில் வைக்கப்பட்டிருந்த மரத்தாலான பனிமய அன்னை சுரூபத்தைக் காண்கிறார். எழிலே உருவான, பார்த்த மாத்திரத்தில் கண்ணை/கருத்தினைக் கவரும் அச்சொரூபத்தினைக் கண்டவுடன் அவருக்குத் தமது தூத்துக்குடி நகர ஞானப் பிள்ளைகளின் நினைவு வர அவர்களின் கத்தோலிக்க விசுவாசம் இன்னும் ஆழப்பட, ஓங்கி வளர அதனை அனுப்பித்தர வேண்டுகிறார். நம் சவேரியாருக்கு இந்த எண்ணம் தோன்ற மற்றுமொரு காரணமிருந்திருக்கிறது. அவர் தென் தமிழக கடற்கரையோரம் கிறித்துவை அறிவிக்க காலடி எடுத்து வைத்த நேரம் இங்கு இந்து மறையைப் பின்பற்றிய மக்கள் மதுரை மீனாட்சி மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் என்றழைக்கப்பட்ட பெண் தெய்வ வழிபாடுகளைக் கைக்கொண்டிருந்தனர். இதற்கு மாற்றாகவே மரியாளின் சுரூபத்தினை இங்குள்ள மக்களுக்குப் பரிசாக அனுப்ப ஆசை கொண்டார் நம் அண்ணல். ஆனால் அவரது இந்த விருப்பம் அவரது இவ்வுலக வாழ்வின் மரணத்திற்க்குப் பின்புதான் நிறைவேறியது. தமது பொக்கிஷமாகக் கருதிய பனிமய மாதா சுரூபத்தினைத் தம்முடனே வைத்திருக்க விரும்பிய அருட் சகோதரிகள் சவேரியாரின் மறைவு செய்தியை அறிந்தபின்பு மனம் மாறி அவரது வேண்டுகோளுக்கிணங்க செயிண்ட். ஹெலினா கப்பலின் மூலம் அனுப்பி வைக்க 1555 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் நாள் தூத்துக்குடி கரை சேர்ந்தது. வந்த நாள் முதல் இன்று வரை சகல மனிதராலும் அன்பு செய்யப்படும் நம் அன்னை முழு மரியாதைக்குரியவளாக தம்மைத் தேடி வரும் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு முற்றிலும் பாத்திரமானவளாகத் திகழ்வது கண்கூடு. விலை உயர்ந்த அணிகலன்கள் அணிந்ததினாலன்று அவள் இருப்பு வெளிப்படுவது, அவளிடம் காணப்படும் பெண்மையின் இலக்கணங்களான அன்பு, அமைதி, பொறுமை, கருணை, இரக்கம் போன்ற குணநலன்களால்தான் என்பது இம்மணுலக மாந்தர் யாவரும் அறியவேண்டிய முக்கால சத்தியம்.
0 comments:
Post a Comment