மழைவிட்டும் தூவானம் தொடரும் கதையாய் பனிமய மாதா திருவிழா கடந்த 5 ஆம் தேதி முடிந்தும் அதனை ஒட்டிய இன்னும் சில நிகழ்வுகள் நிழல் படங்களோடு பதிவாக வேண்டும் என்று நான்கு நாட்களாக நினைத்து அதற்கான நேரத்தினை ஒதுக்காமல் ஒத்தி வைத்தது ஏதோ மற்ற அலுவல்களில் மூழ்கியதால் என்று நீங்கள் கருதினால் அது பிழை. நான் இங்கே என் புகைப்படக் கருவியினால் கிளிக்கிட்ட சில நிழல் படங்களை பதிவிலிட்டிருக்கிறேன். உங்கள் பார்வைக்காக. உனக்குத்தான் வேலையில்லை, எங்களுக்குமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நேரம் கிடைக்கும்போது பார்வையிடுங்கள். உங்கள் இருப்பில் இது ஓர் மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தினால் இந்தப் பதிவு அதன் பிறவிப் பலனை அடைந்ததாக அர்த்தம்.
பொருட்காட்சியில் பல்வகை ராட்டினங்களில் ஆடி மகிழ்வுற்ற மக்கள்


மாதா கோவில் ஆண்டு திருவிழா நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக அன்னையின் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி இயேசுவின் திரு இருதய ஆலய வளாகத்தைக் கடக்கையில் பக்தர்களின் வணக்கத்திற்காக சில மணித்துளிகள் நிறுத்தப் பெறும்.
எழிலார்ந்த அன்னையின் திருவுருவ சுரூபம் ஒளி வெள்ளத்தில் மிதந்து வந்த காட்சி. அமைதியின் அடையாளமெனத் திகழும் தாயை தரிசிக்க கூட்டம் கூட்டமாய், குடும்பம் குடும்பமாய் வந்த அவள் பிள்ளைகள் அவள் பிரசன்னத்தில் சிறிது நேரமேனும் தம் மன பாரங்களை, கவலைகளை மறந்து அளவளாவினர். வீடு திரும்பும் வழியில் அவர்கள் எண்ணமெல்லாம், தங்களின் கஷ்ட, நஷ்டங்கள் தீர்ந்து தம் வாழ்வின் எஞ்சிய நாட்கள் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கும் என்பதை எழுதத் தேவையில்லை.
0 comments:
Post a Comment