நம்பிக்கையும் வாழ்வும்
நம்பிக்கை கொள்வது எதற்காக? அது வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வாயிலாக இருக்கும் என்பதற்காகத்தானே? கிறிஸ்தவ விசுவாசிகள் பலர் தமது பரம்பரை வழி பாரம்பரியத்தினாலேயே கிறிஸ்தவர்களாக வலம் வருகிறார்கள் என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. அதிகதிகமாக விவிலியத்தினை வாசிப்பவர்கள், இறை வார்த்தைகளை மேற்கோள் காட்டி விவாதிப்பவர்கள், தங்களின் கிறித்தவ பாரம்பரியங்களைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்பவர்கள், தவறாமல் ஆலயம் செல்வோர், தம் தேவைகளுக்காக மட்டுமே ஆண்டவனை நினைப்போர் ஆகியோரின் வாழ்வு முறையைக் கணக்கில் கொண்டால் உண்மைக்கும், நடைமுறைக்கும் இடையே ஒரு பெருத்த இடைவெளி இருப்பதை நாம் உணர முடியும். nhநாம் நம் அன்றாட வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய ஒரு சில கிறிஸ்தவ விழுமியங்களும், நடைமுறை வாழ்வில் அதன் தாக்கங்களும் பற்றி இங்கு விவாதிப்போம்.
மன்னிப்பு
சகோதரர் இருவர். தகப்பன் இறந்தபின் அவர்களுக்கிடையே சொத்தைப் பங்கிடுவதில் தகராறு. தாம் சிரஞ்சீவியாய் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் பெற்றவர் உயில்கூட எழுதி வைக்கவில்லை. விளைவு வாரிசுகளுக்கிடையே ஓயாத சண்டை, சச்சரவு. நிலத்தில் ஓர் அடியைக் கூட உடன் பிறந்தவனுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லை. நாள் ஒன்று வந்தது. மீண்டும் இருவரிடையே தடித்த வார்த்தைப் பரிமாற்றம். சமரசத்திற்கு வழியில்லை. ஆத்திரம் தலைக்கேற இருவரும் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ந்தனர். சொத்து பொது உரிமை ஆனது. இது ஓர் அதீத முடிவு. ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர, சகோதரிகள் எத்தனை பேர் மனத் தாங்கலால் ஒருவர் ஒருவரிடையே பேசிக் கொள்வதில்லை. செத்தாலும் முகத்தில் விழிப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் இறுதி வரை வாழ்ந்து மடிவது நாம் காணக்கூடிய ஒன்று.
நீங்கள் பிறர் குற்றங்களை மன்னிக்காவிடில் உங்கள் வானகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார். மத் – 6:15
புறணி
இது விகித அடிப்படையில் அதிகம் காணப்படுவது பெண்களிட்த்தில்தான். உண்மையான அன்புக்கு எதிரான இது, இயற்கையாகவே அவர்களின் குணநலனாய் அமைந்து விடுகிறது. நமது வீட்டில் ஆயிரம் இருக்கும் ஆனால் அதை விட்டு விட்டு அடுத்த வீட்டுப் பிரர்ச்சினைகளைப் பற்றிப் பேசுவதில் ஓர் அலாதி இன்பம் இந்த அம்மணிகளுக்கு. இதனடிப்படையிலேயே பெரும்பாலான சின்னத்திரை மெகாத் தொடர் நிறுவன்ங்கள் பெண்களைக் கொண்டு தங்களின் பிழைப்பை நிலைநிறுத்த முனைகிறார்கள் என்றால் அது மிகையில்லை. அன்றாடம் நமது வீடுகளில் பொதுவாக நடக்கும் உணர்வுப்பூர்வமான போராட்டங்களன்றி ஒருத்திக்கு இருவர்/பலர் என நடைமுறையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத உறவுச் சபலங்களை திரையிடுவதன்மூலம் நம் தமிழ் கலாச்சாரத்தில் காணக்கூடாத ஒன்றை உண்மைபோலச் சித்தரித்து சமூகத்தினைச் சீரழிக்கும் வேலைகளைச் செவ்வனே செய்து தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். சில மாதங்கள் முன்பு வரை தமிழகத்தில் 8 மணிநேரத்திற்கு குறையாத மின்வெட்டு அமலில் இருந்தபோது மற்றவை பற்றி யோசித்தார்களோ இல்லையோ, தொடர் நாடகங்களின் தொடர்ச்சியைப் பார்க்க முடியவில்லையே என வருந்தியவர்களே அதிகமிருந்தனர். இது ஒரு பொழுதுபோக்காகத் தோன்றினாலும் நாளடைவில் நம்மையும் அறியாமல் மகிழ்ச்சியைப் பறிக்கும் காரணியாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சீராக் ஞான நூல் 28:13-26 மற்றும் நீதி மொழிகள் 25:9-10 மற்றவர் குடி கெடுக்கும் புறணி ஓர் தீய நடத்தை என விளிக்கின்றது.
நல்லெண்ணம்
சமீபத்தில் எங்கள் பகுதி சாலையின் ஓர் பகுதியில் பத்து முதல் பதினைந்து வரை எண்ணிக்கையிலான மிளகாய் வற்றல் மற்றும் சில பொருட்களுடன் மண்ணில் இரைந்து கிடக்கக் கண்டேன். சமையலுக்குக் காரம் சேர்க்கும் வற்றல் தெருவிலா? என்று ஆச்சரியம் அடைந்தேன். பின்னர்தான் தெரிய வந்தது, தன் வீட்டில், குடும்பத்தில் தற்போது நிலவும் தரித்திரமோ/நோயோ/துன்பமோ தன்னை/தம்மை விட்டு தாம் தெருவில் மாந்திரீகம் செய்து விட்டு வந்த பொருட்களை அறியாமல் மிதிக்கும் நபரை/குடும்பத்தைச் சேரட்டும் என்ற நல்லெண்ணத்தினால் என்று. என்ன ஒரு பிறர் நலம்! சற்று யோசித்துப் பார்த்தால் தான் மட்டும், தனது குடும்பம் மட்டும் நன்றாய் இருந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்கிற மனோபாவம். இதுமாதிரி வெளிப்படையான வற்றல் செயல்பாடுகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களிடையே இல்லையென்றாலும், தன்னைவிட மற்றவர்கள் உயர்வில் உண்மையாகவே மகிழ்வது எத்தனை பேர்? கிறிஸ்தவ விழுமியங்கள் வாழ்வாக முயற்சிகளை அனுதினமும் முன்னெடுப்போம்.
வாழ்க வளமுடன். பயணி
0 comments:
Post a Comment