Friday, October 26, 2012

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்


விவிலியம் கிறித்தவர்களின் வேத நூல் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. திருச்சபை வரலாற்றில் கத்தோலிக்கர்கள் இந்த விவிலியத்தினைக் கையில் தாங்குவதே பாவம் எனக் கருதிய காலங்கள் உண்டு. மிக சமீப காலமாகத்தான் விவிலியம் என்பது கடவுளின் வார்த்தை,. ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ளவரும் விசுவாசிகள் கையில் அதனைத் தாங்கி வரவேண்டும். அடிக்கடி வீடுகளிலும், இறைமக்கள் கூடிவரும் பொது இடங்களிலும் அதனை வாசித்து தியானித்து வாழ்வாக்க வேண்டும் என்பது வலியுறுத்தப் பெறுகிறது. விவிலியத்தின் மூலத்தினை நோக்குங்கால், பழைய ஏற்பாட்டில் தொடக்கநூல் தொட்டு கடைசி வரை விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் வழி வழியாக, தலைமுறை, தலைமுறையாக வாய் வழிச் செய்தியாக சொல்லப்பட்டு வந்தவையாகும். இவை பின்னர் மொழி தகவல் பரிமாற்றம், எழுத்துருவாக பரிணமித்தபோது ஏடுகளில் பொறிக்கப்பட்டன. விவிலியத்தின் தோற்றம், பிண்ணனி இவ்வாறிருக்க, கடவுள் இதன் வழியாக தாம் படைத்த மாந்தருக்கு எதை வெளிப்படுத்த விரும்புகிறார்?

வார்த்தைக்கு வார்த்தை விவிலியத்தின் அடிப்படையிலேயே நம் வாழ்வு அமைய வேண்டும் என்றால் அது நடைமுறையில் இயலாத காரியம். வார்த்தையும், வாழ்வும் என்று கொண்டால் இரண்டுக்குமிடையேயான இடைவெளி வானுக்கும், பூமிப்பந்துக்கும் உள்ள தொலைவாகும். வார்த்தைக்கும், வாழ்வுக்குமிடையே மிக நீண்ட போராட்டமே நடந்து வருகிறது என்பது கண்கூடு. அச்சு பிசகாமல் நான் விவிலியத்தின் மேற்கோள்களின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறேன் என்று எவராவது சொல்வாரானால் அது முற்றிலும் பொய். இதைச் செய், இதைச் செய்யாதே என்ற நேர்க்கோட்டில் அல்ல மாறாக, இவை இரண்டும் கலந்த சாம்பல் நிறப்பகுதியிலேயே இறைவார்த்தை நமது வாழ்வாக முடியும். எந்த ஒரு தனிமனித/சமூக ஒழுங்குக்கும்  அதன் பயன்பாடு, அவசியத்தின் அளவுகோல் அதற்கான நிகழ்ச்சி, சம்பவத்தின் காரணப் பிண்ணனியை மையமாகக் கொண்டது. எந்த ஒரு செயலையும் நாம் நேரடியாக சரி, தவறு என்று தீர்ப்புச் செய்ய முடியாது. அந்தக் குறிப்பிட்ட செயலை மதிப்பீடு செய்யும்போது காலம், ஒழுங்கு, பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் அங்கு நிலவும் கலாச்சாரம் போன்றவற்றைக் கணக்கில் கொளல் வேண்டும். மேலும் கடவுள் தம் பிள்ளைகள், ஆன்மீக முதிர்ச்சியுடன் எந்த ஒரு செயலையும் சீர்தூக்கிப் பார்த்து நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியின் ஏவுதலுக்கேற்ப (யோவான் 16:13) இறை வார்த்தை சத்தியத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய விரும்புகிறார்.

ஐரோப்பாவில் அருட்தந்தையர்களிடன் கலந்துரையாடல் மாநாடு ஒன்று நடந்தது. அம்மாநாட்டிற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது? அங்கெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆலய வழிபாடுகளுக்கு ஒழுங்காய் வருவதில்லை. வருகை தருகின்ற ஒரு சிலரிலும் பலர் மறையுரை சமயங்களில் தூங்கி வழிகின்றனர். தற்போது இருக்கும் மந்தையின் ஆடுகளும் இதர சபைப் போதகர்களால் அபகரிக்கப்படுகின்ற சூழல். பல்வேறு வரலாற்று மறைபரப்புப் பணியாளர்கள் எந்தவித வாழ்க்கை வசதிகளும் இல்லாத காலங்களிலும்கூட கல்லிலும், முள்ளிலும் கால் நடந்து, ஊண், உறக்கம் மறந்த நிலையில், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழலிலும் மறைபரப்புப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, இரத்தம் சிந்தி மறைசாட்சியாய் மரித்து வளர்த்தெடுத்த திருச்சபை, தனது பாரம்பரிய கிறிஸ்தவர்களைக்கூட உறுப்பினர் எண்ணிக்கையில் இன்று ஒன்றன் பின் ஒன்றாக இழந்து வருகிறது என்பது வேறு விஷயம். இந்தப் போக்கு மாறவேண்டும். ஒருவர் சொன்னார், நாம் மக்களைக் கவர வினாடி வினா போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். மற்றொருவர், நாம் பல்வேறு கண்கவர் தொடர்நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யலாம். புதிய, புதிய ஆலயங்கள், கெபிக்கள் கட்டலாம். நற்செய்திக் கூட்டங்கள், ஆவிக்குரிய கூட்டங்கள், பல்வேறு திருவிழாக்கள், ஆடம்பர வழிபாடுகள், தங்கத்தேர் போன்றவற்றை தற்போதுள்ள நிலையிலிருந்து மக்கள் விரும்புகின்ற வகையில் சில மாற்றங்கள் செய்து ஏற்பாடு செய்யலாம் என்றார் பிறிதொருவர். இவ்வாறு பல அருட்தந்தையர்கள் தங்கள் சிந்தையில் உதித்த பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இறுதியாக தன்னிலே முழு அமைதியை உணர்ந்த ஒருவர் மட்டும் சபையிலே எழுந்து நின்று `நண்பர்களே! இறைமக்களிடையே ஆர்வத்தினை அதிகரிக்க பல்வகைத் திட்டங்களைப் பற்றி உரையாடினீர்கள். ஆனால் அவர்களின் ஆர்வமின்மைக்குக் காரணம் இறைவார்த்தையைப் போதிக்கும்போது அவர்கள் கேட்காத கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதுதான் என்று நினைக்கிறேன் என்று முடித்தார்.
  வாழ்க வளமுடன்.
           

0 comments:

Post a Comment