ஆத்மா அழிவில்லாதது. கிறித்தவர்களாகிய நமக்கு இவ்வுலக வாழ்விற்குப் பின் உடல் மண்ணில் புதையுண்டு புழு, பூச்சிகளால் அரிக்கப்பட, அந்தக் குறிப்பிட்ட ஆன்மா இறுதித் தீர்வைக்காக காத்திருக்கவேண்டும். இறைமகன் மாட்சியோடு வரும் இறுதித்தீர்வை நாளில், தம் வாழ்நாளில் இப்புவியில் புரிந்த நன்மை, தீமைகளுக்குத் தக்கவாறு கைமாறு பெற வேண்டும் (தி.வெ. 20:12,15). இது நமது விவிலியம் சொல்லித் தரும் பாடம். `நான்’ என்று குறிப்பிடும் இந்த உடலென்ற உருவத்திற்க்குப்பின் எஞ்சி நிற்பது ஆன்மா மட்டுமே. மூட நம்பிக்கைகளுக்கு வழிகோலும் என்பதாலேயே புத்தர் கடவுள், ஆன்மா என்ற தத்துவத்தை ஒப்புவதில்லை. இந்து மதமோ, எந்த ஒரு மனிதனும் அவனவன் வினைப் பயனுக்கேற்ப இறுதி முக்தி அல்லது நிர்வாண நிலைக்கு முன் பற்பல பிறவிகளைப் பூண்டாக வேண்டும். அது நாயாகவோ, கழுதையாகவோ எந்தப் பிராணியாகவும்கூட இருக்கலாம். எப்படியோ ஆன்மா என்ற ஒன்று உண்டு என்பது நாம் பாரம்பரியமாக படித்து வரும் பாடம். இப்போது நமது கேள்வி ஆன்மா என்ற ஒன்று உண்டு என்றால் அவை அருவமாத்தான் இருக்க வேண்டும். அப்படி அருவமாக இருக்கும் இந்த ஆன்மா உண்மையில் நம் புலன்களுக்குத் தோன்றும் முறையில் வெளிப்படுமா? அவற்றினால் மனித குலத்திற்கு ஏதும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டா?
லுக்மான் என்பவர் மனித இனம் இம்மண்ணில் தோன்றிய சில ஆயிரம் ஆண்டுகளில் இயற்கையின் வரப்பிரசாதமான செடி, கொடிகளின் மருத்துவ பயன்பாடுகள் பற்றிய பத்தாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போதைய அறிவியல் ஆராய்ச்சி சாலை வசதிகள் ஏதும் இல்லாத அக்கால சூழலிலும் அவரால் எப்படி இது முடிந்தது. அவரே இதற்குப் பதில் சொல்கிறார். ஒவ்வொரு செடியின் அருகிலும் சென்று `நீ எந்த வியாதியைப் போக்க உதவுவாய்? உனது மருத்துவக் குணம் என்ன? எனக் கேட்பாராம். செடிகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பது தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பு. ஆனால் அவை வாய் விட்டு எந்தத் தகவலையாவது வெளிப்படுத்தியது என்பது இன்னும் பதிவு செய்யப்படாத ஒன்று. அப்படியானால் இது எப்படி சாத்தியம்? மெய் எதுவென்றால் அருவமாய் இருக்கும் ஏதோ ஓர் ஆத்மா இந்த நற்கிரியையில் தன்னை ஈடுபடுத்தி உதவியிருக்கிறது. ஆரம்ப நாட்களில் மனிதர் ஆவிகளோடு பேசும் முறை பழக்கத்திலிருந்திருக்கிறது. நாகரீகம் முற்ற, மனித மனம் தனது நுட்பமான உணர்வினை இழந்துவிட்டது. நாம் எதனை விரும்புகிறோமோ அதைத்தான் பார்க்கிறோம், கேட்கிறோம். ஜனசந்தடி நிறைந்த சந்தையில் கூட மலர்களை ஆராய்ச்சி செய்யும் ஒரு பேராசிரியருக்கு அன்றலர்ந்த ரோஜா மணம் வீசுகிறது, காசேதான் கடவுளடா! என்று பொழுது புலர்ந்து இரவு மட்டும் பணத்தின் நினைவாகவே வாழும் மனிதனுக்கு ஒரு நாணயம் கீழே விழும் மெல்லிய ஓசை கேட்கிறது.
மனித வரலாற்றில் ஆத்மா/ஆவி தன்னை மாந்தருக்கு வெளிப்படுத்திய எவ்வளவோ நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தம் புலனின்ப இச்சைகள் நிறைவேறாமல் இவ்வுலக வாழ்வை நீத்த ஆன்மா அவற்றை நிறைவேற்றிக் கொள்ள சங்கல்பங்கள் குறைவாக உள்ள, விரக்தியின் விளிம்பில் தன்னம்பிக்கையற்று வாழும் மானுடர்களைப் பற்றிக் கொள்கின்றன என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.
`அஹம் ப்ரம்ஹாஸ்மி’ – `நானே கடவுள்’ என்ற கோட்பாடுடைய இந்து மதம் இறப்பிற்குப்பின்பு இறந்தவரை தெய்வமாக வணங்குகிறது. அவர்களுக்கான நினைவு நாட்களையும் நம்மைப்போல் முக்கியமாகக் கருதி தவறாமல் அனுசரிக்கிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களாகிய நமது கடமை இறந்தவர்கள் மட்டில் என்னவென்று சொல்லப்பட்டு வருகிறதென்றால் அவர்களின் முக்திக்காக நாம் அவர்களை நினைந்து இறைவனிடம் மன்றாடவும், தான தருமங்கள் செய்யவும் வேண்டும். இவ்வுலக வாழ்வின் மறைவுக்கு முன் தாம் புரிந்த பாவங்களுக்காக, தம் அயலாருக்கெதிரான குற்றங்களுக்காக மனஸ்தாபம் பெறாத ஆத்மாக்களுக்காக, அவர்களின் ஈடேற்றத்திற்காக வேண்ட நமக்குக் கடமையுண்டு. இதை நினைவூட்டும் வண்ணமே ஒவ்வோர் ஆண்டும் சகல ஆத்துமாக்கள் திருவிழாவினை அவர்களை நினைந்து கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கிறது. கருத்தியல் எதுவாயினும் சரி, ஆத்மா அழியாதது. இறுதித் தீர்வையோ, அடுத்த இழிபிறப்போ எதுவாயினும் சரி – நாம் சஞ்சரிக்கும் இப்பிரபஞ்சத்தில், வாழும் நாட்களில் தீயவற்றிற்கு வழிவகுக்கும் ஆசை துறந்து, நல்லவற்றையே நினைத்து, பேசி, நற்செயல்களை மேற்கொண்டால் முக்தி தரும் அப்பேரின்பம் நமது உடமையாகும் என்பது பசுமரத்தாணிபோல் நம் மனதில் பதிய வேண்டிய முக்கால சத்தியம்.
வாழ்க வளமுடன்.
0 comments:
Post a Comment