Saturday, July 29, 2017

எது சிறந்தது?

              ஒரு குறிப்பிட்ட செயலின் நோக்கமா, விளைவா? எது சிறந்தது? தலைப்பை நோக்கினால் ஏதோ பட்டிமன்றம் போல தோன்றும். ஆனால் ஒரு நல்ல நோக்கம் அல்லது செயலின் பலன் என்பதை எந்த அளவுகோல் கொண்டு அளவிடுவது?




                நம் சகோதரி சார்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்புடைய கதை இது. வீரன் ஒருவன் தன் எதிரியினை வீழ்த்தும் பொருட்டு வில்லில் நாண் பூட்டி அம்பினை எய்கிறான். எய்யப்பட்ட அந்த அம்பு குறிதவறி எதிரியின் கால் நுனியில் தைக்கிறது. அம்பு உடலில் தைத்த அந்தப் பாதப் பகுதி உடலின் அனைத்து நரம்பு முடிச்சுக்களும் சந்திக்கும் இடம் ஆதலால் அம்பு துளைத்ததால் அடிபட்ட அந்த நபருக்கு, நெடுங்காலம் எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத தலைவலி குணமாயிற்று.

            ஒருவரைக் கொலை செய்யும் நோக்குடன் கூட்டம் ஒன்று துரத்துகிறது. அவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டால் உயிரை விட வேண்டியதுதான் என்ற சூழல், அந்த நபர் தம் பலம் கொண்டமட்டும் எவ்வளவு விரைவாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஓடுகிறார். உயிர்பயம் அவருக்கு. வழியில் ஓர் யோகியைத் தாண்டி ஓட நேரிடுகிறது. பின்னால் துரத்திவந்த கொடியவர் கூட்டம் யோகியிடம் `சற்றுமுன் இங்கே யாரும் உம்மைக் கடந்து ஓடிச் சென்றார்களா? சொல்லும் சீக்கிரம்' என்று வினவ அந்த யோகியோ வாய் திறவாமல் மௌனியானார். அவர்கள் மீண்டும், மீண்டும் அதட்டிக் கேட்க அவர் வாயே திறக்கவில்லை. வெகுநேரம் முயற்சித்தும் அவரிடம் பதில் வராததால் கோபமுற்ற அந்தக் கொடியவர் கூட்டம் அவர் பேச இயலாதவர் என எண்ணி அவ்விடம் விட்டு அகன்றது. புன்முறுவல் பூத்த யோகி தன் தவத்தினைத் தொடர்ந்தார்.  

         மேற்கண்ட இரு நிகழ்வுகளையும் நம் கவனத்தில் கொண்டால் முதல் சம்பவத்தில் நோக்கம் சக மனிதனின் உயிரைப் பறிப்பது. ஆனால் விளைவு எய்த அம்பின் குறி தவறி அதனால் ஒரு நன்மை விளைகிறது. இதையொட்டிய ஒரு விடயம் என் நினைவுக்கு வருகிறது. பெருங்குடிகாரர் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி ஓர்நாள் தலைக்கேறிய மிதமிஞ்சிய போதையினால் சாலை விபத்தில் சிக்கினார். விளைவு அவர் கழுத்து எலும்பு முறிந்தது. கழுத்துப் பகுதி சாய்ந்து நெடுநாள் வாழ்வைக் கழித்துவந்த அவர் ஓர்நாள் தன் அவல நிலையினை எண்ணி மனம் நொந்தவராய் மது புட்டியைக் கொண்டு தன் கழுத்தினைத் தாக்கிக் கொண்டார். வலியில் துடித்து மயங்கிய அவரை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிழைத்துக் கொண்டார். அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் முன்னர் வளைந்திருந்த கழுத்துப் பகுதி சரியானதுடன் மற்றெல்லாரையும் போல நிமிர்ந்த நடையினரானார். இப்போது சொல்லுங்கள் குடி குடியைக் கெடுத்ததா? அல்லது குடி குடியைக் கொடுத்ததா?

    நோக்கமா? விளைவா? முடிவான நன்மையின் பொருட்டு நோக்கம் தீயதாய் இருந்தாலும் அதனால் ஓரு நல்லது நடக்குமாயின் தீமையும், நன்மையாய் மாறுகிறது அன்றோ? இது விதிவசம் என்றாலும் பிறருக்கு நன்மையே செய்ய வேண்டும் என்ற விழுமியத்திற்கேற்ப எண்ணம் கொள்ளுதலும்,   அதன் மூலமான செயலால் நன்மையே விளையுமென்றால் அதுதான் கடவுள்தன்மை என்பதைத் தவிர வேறு என்ன கூறுவது?

0 comments:

Post a Comment