Monday, July 31, 2017

செய்நன்றி

     
            அந்த முதியவருக்கு அகவை 65 இருக்கும். அனுதினமும் துடித்துக் கொண்டிருந்த அவர் இதயம் சத்தியாகிரகம் செய்தது ஓர்நாள். மார்பு வலி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர் இதயத்திற்கு இரத்தம் சுமக்கும் குழாயில் அடைப்பு என்றார். ஓட்டம் அடைக்கப்படவில்லை என்றால் உயிரோட்டம் தடைபடும் என, அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. குறித்த நாளும் வந்தது. இரத்தக் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது. ஓரிருநாள் தீவிர சிகிச்சைக்குப் பின் தனி அறைக்கு அவரை மாற்றினார்கள். சிலநாட்களுக்குப் பின் அவர் சிகிச்சை முடிந்து வீடு செல்லும் நேரமும் வந்தது. சிகிச்சைக்கான பில் அவரிடம் தரப்பட்டது. அதில் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவச் செலவு வகைக்காக பதினைந்து இலட்சம் கோரியிருந்தனர். முதியவர் அதனை வெகுநேரம் உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த மருத்துவர் அவரிடம் `ஐயா, நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வெகுநேரமாக மருத்துவத்திற்கான செலவு ரசீதினை உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே. உங்களிடம் தேவையான பணம் இல்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் `என்னிடம் பணம் தாராளமாக இருக்கிறது. அதிகம் என்றாலும் என்னால் பணம் செலுத்த இயலும்' என்றார். இப்போது மருத்துவர் கேட்டார். `பின் எதற்காக பில்லை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்?'

     சிந்தையில் ஆழ்ந்தவராய் அந்த முதியவர் சொன்னார். `இல்லை. என் இதயத்தில் கோளாறு எனக் கண்டறிந்து அதனை சரிசெய்ய 15 இலட்சம் பில் தந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த உறுப்பைப் படைத்தது முதல் இந்நாள்வரை பாதுகாத்து வந்த ஆண்டவன் அதற்காக ஒரு ரூபாய்கூட என்னிடம் கேட்டதில்லை' என்று கூறி கண் கலங்கினார். 



    நண்பர்களே இது ஓர் வேடிக்கைக் கதையாக இருக்கலாம். ஆனால் இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு. தாயின் கருவில் நம்மைத் தேர்ந்துகொண்ட இறைவன் நம்மை அவன் சாயலாய்ப் படைத்ததே அவன் அளப்பரிய கருணை. அதிலும் ஒவ்வோர் உறுப்பாய் அதற்கென குறிப்பிட்ட பணியையும் கொடுத்து முழு உடலும் ஆரோக்கியமானதாக பராமரித்து வருவது அவன் அன்பை வெள்ளிடை மலையாய்ப் புலப்படுத்துகிறது. இலவசமாய் அளிக்கப் பெறுவது எப்போதுமே அதன் மதிப்பைப் பெறுவதில்லை. நம்மைப் படைத்தவனுக்கு நாம் கூலியாய் எதையும் கொடுப்பதில்லை. அதனால் என்னவோ நமது உடலை, அதின் உறுப்புகளைப் பற்றிய  அக்கறை இருப்பதில்லை. உடலுக்கு ஊறு விளைவிக்கும் தேவையற்ற, தீய பழக்கங்களினால் நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம். அதன் பயனாக உடல் சுகவீனமுற்றால் மருத்துவத்திற்கென நம் சொத்து, சுகங்களை விற்றுக்கூட காப்பாற்ற முனைகிறோம். உடல் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்போது அதன் அருமை நமக்குப் புரிவதில்லை என்பதே உண்மை. இனியாவது நாம் மற்றவர் சரீர வியாதியால் படும் துன்பங்களைக் கண்டு தெளிவு பெறுவோம். அந்த சோதரருக்காகவும் வேண்டுவோம். நம்மாலியன்ற உதவிகளை ஆற்ற மனமுவந்து முன்வருவோம். அந்த பரம்பொருளை நம்மில் பிரதிபலிப்போம். வாழ்க வளமுடன்.

0 comments:

Post a Comment