Wednesday, August 2, 2017

மீண்டும் ஒரு வாய்ப்பு...?

     
           

            நான் இறந்து என் பூதவுடல் வீட்டின் நடுவே கிடத்தப்பட்டிருக்கிறது. என் உடலைச் சுற்றி என் மனைவி, பிள்ளைகள், அம்மா, அப்பா, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழுது கொண்டிருக்கக் காண்கிறேன். 

           என்னைப் பெற்றெடுத்த தாய், மற்றொருத்திக்கு நான் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டபோதும் பெற்றவள் என்பதினால் என் பிரிவு தாங்காமல் புலம்பி அழுகிறாள். நான் எந்த வயதினனாலும் அவளுக்குப் பிள்ளைதானே? தன் உதிரத்தால் பாலூட்டி, சீராட்டி என்னை ஒரு மனிதனாக வளர்த்தெடுத்தவள் அவள். என் பசிக்காக சோறூட்டி தன் பசியை ஒரு பொருட்டாக எண்ணாதவள். திருமண விருந்திற்குச் சென்றபோதும் மறவாமல் எனக்குப் பிடித்த உணவுப் பண்டத்தை தன் கைக்குட்டையில் முடிந்து கொண்டு வந்தவள். நான் உடம்பு முடியாமல் அவதிப்படும்போது தன் உடலில் வலியை உணர்ந்தவள். இராப்பகலாய் கண்விழித்து என்னைப் பாதுகாத்தவள்.  எனக்குத் தாரமாய் ஒருத்தி என் கைப்பிடித்தபோது, நான் என் தாய்க்கு தூரம் காட்டியபோது மாறாத அன்போடு என் நலனில் அக்கறை கொண்டவள், இதோ எனக்காக மாரடித்துப் புலம்ப நான் சவமாய் அவள் முன்னிலையில்.

      என் மனைவி என்னுடைய தலைமாட்டில் நின்றுகொண்டு கண்ணீர் மல்க நின்று கொண்டிருக்கிறாள். என் வாழ்க்கைத் துணையாக வந்தவள், பாதையில் விட்டு நான் மட்டும் பயணத்தினை முடித்துக் கொண்டதை எண்ணி விம்மி விம்மி அழ நான் பெற்ற செல்வங்கள் அவள் முகத்தினைப் பார்த்து தாங்களும் துக்கம் தாளாமல் அழுது வடிகிறார்கள். நான் பழகிய நண்பர்கள் நான் இவ்வுடல் நீத்த சேதி கேட்டு மாலையிட்டு தங்கள் இறுதி வணக்கத்தினை செலுத்த என் வீடு தேடி வந்திருக்கிறார்கள். உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தார் என ஒரு கூட்டம் சோகமே உருவாக நான் உயிரோடு உலாவிய காலங்களில் என்னில் கண்ட நல்லவற்றை மட்டும் நினைந்து வேதனையுடன் அங்கலாய்க்கிறார்கள்.

      இவர்கள் அழுது புலம்புவதைக் கண்ட நான் அரூபமாய் அருகிருக்க, அவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை. உடலோடு இருக்கும்போது நான் மதிப்பளிக்காக தாயன்பு, அரவணைக்க வேண்டிய என் மனைவி மற்றும் பிள்ளைச் செல்வங்கள், உடன்பிறந்தோர், எச்சூழலிலும் என்னைக் கைவிடாத நண்பர்கள், சொந்தங்களைப் பார்க்கும்போது ஏதோ ஒரு வெறுமை என்னை போர்த்திக் கொள்கிறது. நான் என்னையும் அறியாமல் அந்த இறைவணை இறைஞ்சுகிறேன். இறைவா இன்னும் ஒரு வாய்ப்பு கொடு. என்னை ஈன்றவளுக்கு, இன்றளவும் என்னைத் தன் கருவில் சுமப்பதாகவே எண்ணிக் கொண்டு எனக்காகவே வாழும் என் தாய்க்கு நன்றியாக, அவளை உதாசீனப்படுத்தி ஒதுக்கி வைத்ததற்காக மனம் விட்டு அழுது  அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கோரவேண்டும். என்னில் பாதியான என் மனையாளை அணைத்து நான் இருக்கிறேன் எனத் தேற்ற வேண்டும். நான் அலுவலகம் சென்று திரும்பும் நேரம் வாசலில் என் வரவை எண்ணிக் காத்திருக்கும் என் குழந்தைகளை வாரி எடுத்து முத்தமிட வேண்டும். அவர்கள் வளர்ந்து எதிர்காலம் சிறக்க, குழந்தைகள் பெற்று பெருவாழ்வு வாழ்வதை என் கண் குளிரக் காண வேண்டும். நண்பர்கள் உட்பட பிரியமானவர்களீடம் சின்னஞ் சிறு காரியங்களில் குற்றம் கண்டுபிடித்து அவர்களைத்திட்டி, அவமானப்படுத்தியதற்காக மனம் வருந்த அவகாசம் வேண்டும். மொத்தத்தில் நான் இப்பிறப்பின் மேன்மையை உணர்ந்து வாழவேண்டும்.  இல்லாததை எண்ணி விரக்தி, வேதனை, வாழ்வில் வெறுப்பு, சலிப்பின்றி மாபெரும் கொடையாய் நீ எனக்குத் தந்த வாழ்வை செவ்வனே வாழ, தயவுசெய்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடு கடவுளே! 

      கடவுளே! என நான் அலற அருகில் தூங்கிக் கொண்டிருந்த என் மனைவி என்னை எழுப்பினாள். என்னங்க கெட்ட கனவு ஏதும் கண்டீங்களா? என அவள் கேட்க நான் கண்டது கனவு என அப்போதுதான் விளங்கியது. விழித்துப் பார்த்த நான் என் மனைவியையும், குழந்தைகளையும் ஒருசேர அணைத்து முத்தமிட்டேன். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உறுதியான கற்பாறை போன்று உணர்ச்சியற்ற இருக்கும் என் கண்களில் கண்ணீர் என்றவுடன் என் மனைவி பதைபதைக்கிறாள் ஆச்சரியம் நிறைந்த கண்களோடு. எப்போதுமே எரிந்துவிழும் என் தற்போதைய நிலையைக் கண்ட என் பிள்ளைகள் ஆயிரம் கேள்விக் கனைகளோடு என் கண்களையே உற்று நோக்க, ஆனந்தமாய் சில மணித்துளிகள் கடந்து அவர்களை உறங்கச் சொல்லி நாளை விடியலுக்காய் நான் காத்திருந்தேன். என் அம்மாவிடமும், உயிர் நண்பர்களிடமும், உற்றார், உறவினரிடமும் நான் புதிதாய்ப் பிறந்தவன் என சொல்ல, இனி அந்த இறைவன் எனக்கு உணர்த்த விரும்பிய இந்த வாழ்வுக் கொடையின் மகத்துவத்தினை அவர் அனுமதிக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் வீணாக்காமல் வாழ்ந்துவிட, அவன் தந்த வாய்ப்பினை எண்ணி உளம் மகிழ்கிறேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் விடியப்போகும் அந்த நாள் எனக்கு ஒரு புதிய தொடக்கம். புதிதாய் வாழப் போகிறேன். தோழரே, தோழியரே எனக்கொரு கனவு, வாழ்வின் மேன்மையினைக் கண்டுகொள்ள அந்த இறைவன் கொடுத்தான். உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமற்கூட போகலாம். உயிரோடு உலகில் இருக்கும்வரை உறவின் உன்னதம் உணர்வோம். நன்றியுடன் இந்த இறைமையை நம்மில் மற்றவர் பார்க்கட்டும். வாழ்க வளமுடன்.   

0 comments:

Post a Comment