Wednesday, August 23, 2017

ஆன்மா என்றென்றும்


   
     
சமீபத்தில் மறைந்த என் நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கிற்காக சென்றிருந்தேன். உறவினைப் பொருட்படுத்தாத ஒரு சிலர் அங்கும் வீண் வம்பளந்து கொண்டிருக்கக் கண்டேன். அடக்கச் சடங்கிற்கான ஒரு ஏற்பாடும் முன்னெடுத்து செய்யாத அவர்கள்தான் ஏனைய உறவினர்கள் வரவினைக் கூட கவனத்திற் கொள்ளாது சடலத்தினைப் புதைப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள். அதுதான் ஆச்சரியம். மனிதன் இறந்தபோதும்கூட அவனைச் சுற்றி இருப்போர் அவன் உடலை மையமாக வைத்து கூடி கும்மியடிப்பது துரதிர்ஷ்ட வசமானது. இதில் குறிப்பிடவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் யார் அந்த சடலத்தினைப் புதைப்பதில் அதீத ஆர்வம் காட்டினார்களோ அவர்கள் யாருமே அதனை தூக்கி சுமக்க முன்வரவில்லை. யாரைப் புறம் தள்ளினார்களோ அவர்களில் ஓரிருவர் அந்த மனிதனின் சடலத்தை ஆலயத்திற்கும் சரி, மயானத்திற்கும் தூக்கி சுமந்தனர் என்பது வேறு கதை. பின்னர் நான் கேள்வியுற்றது அந்த சவத்தினைக் குளிப்பாட்டக்கூட யாரும் முன்வரவில்லை, மொத்தத்தில் இறந்த அம்மனிதனுக்குரிய இறுதி மரியாதை அதற்குரிய மதிப்பு பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

     சரி நம் தலைப்பிற்கு வருவோம். ஆன்மா என்பது உயிர்மூச்சு எனவும் அது மனித உடலை விட்டு நீங்குவதே மரணம் எனவும், ஒருசாரார் உடலின் மையமான இதயம் தன் இயக்கத்தினை நிறுத்திக் கொள்வதே இறப்பு எனவும் இப்படி பல்வேறு கருத்துக்கள் தோன்றி, ஆன்மா என்பது ஆராய்ச்சிக்குட்பட்ட ஒரு அம்சமாக மாறியிருப்பதை கடந்த இரு நூற்றாண்டுகள் வரலாறு நமக்கு சான்று பகர்கிறது. மரணம் என்ற சொல்லாடலே பலருக்கு வேண்டாத ஒன்றாக இருக்கிறது என்றால் அதைக் குறித்து சிந்திப்பதற்கே நாம் தயாராக இல்லை. ஏனென்றால் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே என்றோ ஓர்நாள் மரணத்தினை சந்தித்தே ஆகவேண்டும் என்னும் உண்மயை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஒரு உடல் என்பது ஆன்மாவிற்கு ஆடை என்பதேயன்றி வேறில்லை. அதனால்தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் இறுதித் தருவாயில் தன் மனையாளிடம் `யாராவது நான் இறந்துவிட்டேன் என்று சொன்னால் நம்பாதே. அழியப்போவது இந்த உடல்தான். ஆனால் நான் அழியாத ஆன்மாவாக என்றும் இருப்பேன்' எனக் கூறிவந்தார். ஓஷோவின் கூற்றுப்படி அக்காலத்தில் கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்த நாட்களிலும், மங்கல அடையாளங்கள் அனைத்தையும் துறந்து அபலையாய் வாழ வேண்டிய சூழலிலும் விதவைக் கோலம் பூணாத விதவையாய் சாரதாதேவி இறுதிவரை வாழ்ந்தார்கள். கணவர் மறைந்தபின்பும்கூட அவர் அறைக்குமுன்பு நின்றுகொண்டு `சுவாமி உணவு தயாராகிவிட்டது. சாப்பிட வாருங்கள்' என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட யாவரும் அந்த அம்மையாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக நினைத்திருந்தனர். ஆனால் சாரதாதேவி அம்மையார் தன் கணவரின் இருப்பை தம் வாழ்நாளின் இறுதிவரை உணர்ந்தவராகவே வாழ்ந்திருந்தார்.

    பொதுவாக ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை. ஒரு பிறப்பில் அது, தாம் கொண்ட மானுட உடல்மூலம் புரிந்த கர்மவினைப் பலன்களுக்காக மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பதாக நம் மண்ணின் மறைகள் பறைசாற்றுகின்றன.  சிலரின் முற்பிறப்பு ஞாபகங்கள் இதனை எண்பிப்பதாக உள்ளன. இந்த ஆன்மா மறுஜென்மம் கொள்ளும் அந்த பிறப்புச் சங்கிலி தொடராமல் தன்னைப் படைத்த பரமனின் திருவடிகளை சென்று அடைய விரும்பியே பல துறவிகள் இவ்வுலக வாழ்வை வெறுத்து வனாந்திரத்தில் தவ முயற்சிகளை மேற்கொண்டனர். தாம் கொண்ட உடலின்மூலம் நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆன்மா அருவமாக, இளைப்பாற இடம் தேடி அலைவதாக அல்லது, தனது பூர்த்தியாகாத ஆசைகளை பிற உடல்மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயல்வதாக நாம் கேள்வியுறுகிறோம். எது எப்படியோ ஆன்மா அழிவற்றது என்கின்ற பேருண்மையினை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். அதனால் பிறப்புச் சங்கிலி தொடரா வண்ணம் நாம் ஆசைகளை, நிறைவேற்ற முடிபவற்றை மட்டும் எண்ணி அதனை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தினை ஒட்டியே விவிலியமும் `உலகமெலாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை ஒருவன் இழப்பானாகில் அதனால் அவனுக்கு வரும் பயன் என்ன?' என்ற வினாவினை நம் முன் வைக்கிறது. இது ஆன்மாவின் இறுதி கதி பரலோகம் என்பதை வலியுறுத்துகிறது. பேரின்பமே பெருவாழ்வு என்பதை உணர்ந்திருந்த பெரியோர் தமக்கென்று எதுவுமில்லாமல் முற்றும் துறந்து வாழ்ந்தனர். தமக்குரிய உணவைக்கூட யாசகம் பெற்று உண்டனர். தங்கள் உயிரைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. தம் உடைமை என்ற உணர்வு கொள்வதினாலேதான் அதனைக் காப்பாற்றி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவா எழுகிறது? எதையும் இப்புவிக்கு கொண்டு வராதவர்களாய், மீளும்போதும் எதனையும் எடுத்துச் செல்ல முடியாதவர்களாய் இருக்கும்போது இடையில் வருபனவறறைப் பற்றிய கவலை எதற்கு? `பற்றற்றான் பற்றினைப் பற்றுக மனமே' என்ற பெரியோரின் அருள்மொழி வாழ்வின் உயர் இலட்சியம் என்னவென்பதை எடுத்தியம்புகிறது. நாம் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிடப் போவதில்லை என்பதற்கு ஒரு கதை வழக்கிலிருக்கிறது.

   அது ஒரு நாள் மதிய வேளை. நெடுந்தூரம் கால்நடையாகவே பயணம் செய்த களைப்பு. பசி மயக்கம் வேறு. ஆற்றின் கரையில் ஒரு மாளிகையைக் கண்டார் அந்தத் துறவி. நேரே மாளிகையினுள் சென்றார். அங்கே ஓர் அறையில் வித விதமான பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. யாரும் அங்கே இல்லை. இவருக்கோ  கண்களை இருளச் செய்யும் பசி. அங்கிருந்த உணவு வகைகளை எடுத்து சாப்பிடத் தொடங்கினார். நன்கு உண்டபின் வெகுநாள் நடந்து வந்த களைப்பில் அருகில் இருந்த உயர்தர மெத்தையில் சற்று கண்ணயர படுத்து உறங்கிவிட்டார். ஆழ்ந்த நித்திரை. சிறிதுநேரம் சென்றபின் யாரோ தன்னை எழுப்புவது போன்ற உணர்வு. கண்விழித்துப் பார்த்தால் அங்கே அரசகோலத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் துறவியைப் பார்த்து `ஏய் யார் நீ? என் விருந்தினர் மாளிகையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டார். அப்போது அந்த துறவி சொன்னார். நான் வழிப்போக்கன். பசி மற்றும் பிரயாணக் களைப்பில் சற்று இளைப்பாற இந்த சத்திரத்திற்குள் பிரவேசித்தேன் என்று. அங்கு நின்றிருந்த அரசருக்கு வியப்பு மற்றும் கோபம். ஆண்டிக்கோலத்தில் இருக்கும் இந்தத் துறவி நம் மாளிகைக்குள் வந்ததோடல்லாமல் இதனை ஒரு சத்திரம் என்கிறாரே. வியப்பில் நின்றுகொண்டிருந்த அரசரிடம் அந்த துறவி `இந்த மாளிகையில் உனக்கு முன் யார் தங்கியது என அரசர் `என் தந்தை' என்றார். மீண்டும் துறவி `அவருக்கு முன்? எனக் கேட்க `அவருடைய தந்தை, என் தாத்தா அதற்குமுன் எனது முப்பாட்டனார்' எனச் சொல்லி `அதற்கென்ன இப்போது? எனக் கேட்டான். துறவி சொன்னார். இந்த மாளிகையில் உன் மூதாதையர் சிறிதுகாலம் தங்கிச் சென்றுள்ளனர். இப்போது நீ. உனக்குப்பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் உன் சந்ததியினர் இங்கு தங்குவர். இப்போது சொல் நான் இம்மாளிகையை சத்திரம் என்று கூறியதில் என்ன தவறு? இந்த பதிலைக் கேட்ட அரசன் அந்தத் துறவியின் காலில் விழுந்தான். என்னை மன்னித்துவிடுங்கள். தாங்கள் ஒரு பேருண்மையை எனக்கு உணர்த்தி விட்டீர்கள். `இப்புவியில் பிறந்த எவரும் நிரந்தரமாய் தங்கிவிட இயலாது. என்றாவது ஒருநாள் மரணத்தினை சந்தித்தாகவேண்டும். இங்கே நாம் எதையும் நம் உடைமையாகக் கொள்ள இயலாது. உயிர் இப்பூதவுடலை விட்டு நீங்கும்போது நாம் எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது என்பதனைப் புரிந்துகொண்டேன்' என்றான். மரணம் என்கிற உணர்வே நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.  உடலின் இச்சைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் மறு பிறப்பு அறுக்க ஆன்ம விடுதலைக்காக இப்புவிவாழ்வில் நாம் நல்ல மதிப்பீடுகளைக் கைக்கொள்ள வேண்டும்.

1 comment:

  1. Jammy Monkey Casino: How To Play Slots Online in NJ
    You will find a 김천 출장마사지 range of 충주 출장샵 games offered from 아산 출장안마 classic video slots and table games 태백 출장안마 to live dealer Blackjack 원주 출장샵 tables with progressive jackpots and

    ReplyDelete