Thursday, July 27, 2017

கணநேர தரிசனம்

      அயலாரிடத்தில் கடவுளைக் கானும் பல்வேறு நிகழ்ச்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாகவே வலம் வரக் காண்கிறோம். கோவில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் நாம் தேடியும் காணக் கிடைக்காத அந்த ஆண்டவன் அயலார் உருவில் தம்மை, நாம் வாழும் இக்காலத்தில், தெருக்களில், ஜனசந்தடி நிறைந்த சந்தையில் என வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். கண்ணிருந்தும் குருடராய் நாம்தான் உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



    எனது நண்பர் ஒருவர் பாதிரியாராக திருIநிலைப்படுத்தப்படும் முன் திருத்தொண்டராக ஆப்பிரிக்க தேசத்தில் பணியாற்றியபோது நடந்த நிகழ்ச்சி இது. ஆப்பிரிக்க கண்டம் நமது உலகாயுத பார்வையில் சபிக்கப்பட்ட பூமி. பஞ்சம், பசி, பட்டினி என எங்கும் அவலச் சாவுகள். சாபத்தின் உச்சகட்டம் நரமாமிசம் உட்கொண்டு உயிர்வாழ வேண்டிய கொடுமை இன்று. செல்வ செழிப்பில் திளைத்திருந்த அந்த தேசம் வரலாற்றில் தன் இயற்கை வளங்களை மற்ற தேசத்தவர் கொள்ளையிட, வேளாண்மை மறைய இன்றைய கால கட்டத்தில் ஒருவேளை உணவுகூட உண்ணமுடியாத தரித்திரத்தில் துவண்டு கொண்டிருக்கின்றனர். பஞ்ச பராரியாய் நம்முன் அவல சாட்சியாய் நிற்கும் அந்த தேசத்தின் நிலையை நாம் அவதானிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நமது மண்ணுக்கேற்ற உணவுப் பழக்கங்களையும், பண்பாட்டுக்  கூறுகளையும் என்று நாம் கைவிட்டோமோ அன்றே நமக்கு நாமே சாவு மணி அடித்துக் கொண்டாயிற்று என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சரி விடயத்திற்கு வருவோம். நண்பரது பணிக்காலத்தில் ஓர்நாள் அந்த ஆப்பிரிக்க கிராமத்தில் உயிருக்குப் போராடிய ஒரு மனிதரைக் கண்டார். அந்த சகோதரன் தலையைத் தன் மடியில் வைத்து நெற்றியை ஆறுதலாக வருடிக் கொண்டிருந்தார். பெற்றவரும், உற்றவரும் கைவிட்ட நிலையில் தன்மேல் கருணை கொண்டு பரிவுகாட்டிய நண்பரைத் தன் தலை உயர்த்தி நிமிர்ந்து பார்த்த அந்த சகோதரன் தன்னிடம் எஞ்சியிருந்த முழுசக்தியையும் திரட்டி அவரிடம் `சகோதரரே உம்மை கடவுளின் தூதராகக் காண்கிறேன்' என்று கூறி மடி சாய்ந்து தன் உயிர் நீத்தார்.

     பொதுவாக நம்மிடம் சக்தி இருக்கும்போது அதாவது ஆண்டவன் அல்லது அயலார் உதவி தேவையில்லை என கர்வம் கொள்கிற நிலையில் நாம் வாழ்ந்து வரும் நேரம் அவனிருப்பை, உணர இயலாதவர்களாய், குருட்டாட்டத்தில் கண்ணிருந்தும் குருடராய் நடக்கிறோம்.

      இழந்தவருக்குத்தானே தெரியும் இழப்பின் மதிப்பு?  விமானப் பயணம் - குறித்த நேரம் தாண்டி விமான நிலையம் வந்து சேருகிறீர்கள். உங்கள் 5 நிமிட தாமதம் அடுத்த விமான காத்திருப்புக்கான மொத்த மணித்துளிகள். அது 5 மணிநேரமோ அல்லது ஓரிரு நாட்களோ? சாலையில் நடந்து செல்கிறோம். நமக்கு ஓரிரு அடிகள் முன்பாக ஒரு வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் மின் கம்பத்தில் மோதி நிற்கிறது. அந்தக் கம்பம் இருந்த இடத்தில் நாமிருந்தால்? நாம் உயிர் தப்பிய அந்த சில வினாடிகள் கடவுள் நாம் வாழ கொடுத்த மறு வாய்ப்பு என்பதைத் தவிர வேறு என்ன கூற இயலும்? அவசரப் பணத்தேவை உங்களுக்கு. சம்பந்தமே இல்லாத ஒரு நபர் நீங்கள் எதிர்பாராத வண்ணம் தக்க சமயத்தில் உதவ முன்வருகிறார்.என வைத்துக் கொள்வோம். யாருக்கு நீங்கள் நன்றிகூற முன்வருவீர்கள்? அவமானம் ஒன்று வந்துசேரும் இக்கட்டான சூழல். சூழ்நிலைக்கைதியாக நீங்கள். சற்றும் எதிர்பாராதவிதமாக ஒருவர் உங்கள் சார்பாக நின்று, நீங்கள் எதிர்நோக்கிய, கற்பனை செய்து அஞ்சிக் கொண்டிருந்த அந்த அதிபயங்கரமான விளைவினின்று தப்புவித்து உங்களைக் காக்கிறார் என்றால் நீங்கள் அவரை எங்கனம் நோக்குவீர்கள்? உங்கள் கண்களுக்கு அவர் கடவுளாகத் தெரிவார் அல்லவா? இதுபோன்று எவ்வளவோ சம்பவங்களை நாம் கேள்வியுறலாம் அல்லது நம் சொந்த அனுபவத்தில் காணலாம். எது எப்படியோ? இறைவனின் உடனிருப்பை அறிவிக்கும் அத்தகைய தருணங்களை நாம் மறந்துவிடலாகாது. ஏனெனில் மனித பலவீனம் தேவை என்று வரும்போது அவர் கடவுளாய் இருந்தாலும் அவரைத் தேடி ஓடுகிறோம். அடிக்கடி தொடர்பு கொள்ள எத்தணிக்கிறோம். ஆனால் அந்தோ அது நன்மையாய் முடிந்தபின் நன்றிகூற நாம் மறந்து விடுகிறோம். அல்லது அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் உண்மை. இனியாவது நம் வாழ்வின் கணநேர கடவுள் தரிசனங்களை உணர்ந்து மனமார்ந்த நன்றிகளை நம் உடலில் உயிர் உள்ளவரை மறவாமல் செலுத்துவோம். அந்த பரம்பொருளின் பிரதிபிம்பங்களாய் அவனியில் வாழும் நாம் அயலார்பேரில் கருணை கொண்டு நம்மாலான உதவிகளை, வேண்டுவோர் தேவை அறிந்து செய்திட முன்வருவோம்.

1 comment:

  1. super maapla... slightly lexicon type tamil :)! Lovely theme. அவதானிக்கிறது.. மூதரிக்கிரதெல்லாம் கொஞ்சம் ஓவர் for ppl like me.. :)! Share it in FB as well

    ReplyDelete